Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 13 நவம்பர் (ஹி.ச.)
புதுக்கோட்டை அருகே கீரனூர் பகுதியில் திடீரென சாலையில் சிறிய ரக விமானம் தரையிறங்கியது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தவிர்க்க இயலாத சூழ்நிலையில், திடீரென சாலையில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதில் விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்தது. விமானம் தரையிறங்கும் போது, அந்த வழியில் வாகன போக்குவரத்து எதுவும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது விமானம் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
விமானத்தில் இருந்த பயிற்சி விமானி இருவர் மீட்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விமானப்படை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற விமானம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் திருச்சி விமான நிலையத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
வாகன போக்குவரத்து மட்டுமே இருக்கும் தார் சாலையில், திடீரென விமானம் தரை இறங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பேர், விமானத்தை வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b