Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நேற்று(நவ 14) காலை வரையிலான 24 மணி நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ராமநாதபுரம், பாம்பன் மற்றும் நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட் பகுதிகளில் தலா, 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும்
(நவ 15) நாளையும் (நவ 16) இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ., 20 வரை, தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் நாளை(நவ 16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b