Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 15 நவம்பர் (ஹி.ச.)
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகன் அருளை பெறுகின்றனர்.
இந்நிலையில் பழனி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.,27 காப்பு கட்டுதல் துவங்கி டிச.,3 வரை நடைபெற உள்ளது.இக்கோயிலில் நவ.,27 மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதல் உடன் கார்த்திகை தீபத் திருவிழா துவங்க உள்ளது.
விழா நாட்களில் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, சின்ன குமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை தீபாராதனை நடைபெறும். இரவு 7:30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும்.
டிச.,2 மாலை 5:30 மணிக்கு பூஜை சாயரட்சை பூஜையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு சண்முகார்ச்சனை நடைபெறும். டிச.,3., அன்று மஹா கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜைகளும் துவங்கும்.
மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மாலை 4:45 மணிக்கு சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார். யாகசாலை தீபாராதனை நடைபெறும். முருகன்கோயிலில் நான்கு மூலைகளில் தீபம் வைக்கப்படும். பின் 6:00 மணிக்கு கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும்.
அதன் பின் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றப்படும். டிச.,3 மலைக் கோயிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
மேலும் இவ்விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் பக்தர்களுடன் இணைந்து செய்து வருகின்றது.
Hindusthan Samachar / vidya.b