Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 16 நவம்பர் (ஹி.ச.)
வடகிழக்கு பருவ மழையின் தொடர்ச்சியாக, வங்காள விரிகுடா கடற்பரப்பின் மீது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. புதுச்சேரியில் இன்று
(நவ 16) மற்றும் நாளை
(நவ 17) கன மற்றும் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் காற்று மணிக்கு 55 கி. மீ. வரை வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து புதுவை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையத்தின் 16-11-2025 நாளிட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கு தென்மேற்கே வங்ககடலில் குறைந்த காற்றழுத்த பகுதியானது நேற்றய தினத்தில் 1730 IST இருந்து நிலவி வருகிறது.
அதனுடன் தொடர்புடைய மேல் வளிமண்டல சுழற்சி கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில் பரவியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 16-11-2025 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எனவே, மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தங்கள் கிராமங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்களுக்கு தகவல் தெரியும் பொருட்டு இதனை உரிய வகையில் அறிவிப்பு செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b