Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 நவம்பர் (ஹி.ச.)
இந்தியாவின் ஆத்மநிர்பார் பாரத் எனப்படும் சுயசார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் கப்பல் வருகிற 24-ந்தேதி இயக்கப்பட உள்ளது.
இந்த கப்பல் மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியின்போது நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
இது, சிறிய வடிவிலான கப்பலாக உருவாக்கப்பட்டபோதும், சக்திவாய்ந்த ஒன்றாக உள்ளது. துல்லியம் மற்றும் உறுதி தன்மையையும் உள்ளடக்கியுள்ளது.
டார்பிடோ வகை எறிகுண்டுகள், நீர்மூழ்கி கப்பலை அழிக்கும் ராக்கெட்டுகள் உள்ளிட்டவையும் இதில இணைக்கப்பட்டு உள்ளன.
கடற்கரை பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்கு தேவையான அம்சங்களை அது கொண்டுள்ளது. தாக்கி அழிக்கும் திறன், வலிமை மற்றும் இயக்கம் ஆகியவற்றை கொண்டும், நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கவும், கடலோர பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொள்ளவும், இந்தியாவின் முக்கிய கடல்சார் அணுகுமுறைகளை பாதுகாக்கவும் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல், மலபார் கடற்கரையில் அமைந்த மாஹி கடலோர நகரின் பெயரை கொண்டுள்ளது. இதன்படி, மாஹி-ரக நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் கப்பல் கடந்த அக்டோபர் 23-ந்தேதி கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
80 சதவீதம் உள்நாட்டு பொருட்களுடன் உற்பத்தியாகியுள்ள இக்கப்பல், போர்க்கப்பல் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் வளர்ந்து வரும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்துகிறது என்று கடற்படை வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM