Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 17 நவம்பர் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையானை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழிபட தரிசன டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் வழிபட ஆன்லைனில் பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட அறைகள் ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவிலில் உள்ள ஆர்ஜித சேவைகளான சுப்ர பாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
இந்த ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை 20-ந்தேதி காலை 10 மணி வரை மின்னணு டிப் செய்ய ஆன்லைனில் பதிவு செய்யலாம். 20-ந்தேதி முதல் 22-ந்தேதி மதியம் 12 மணிக்கு முன் பணம் செலுத்தியவர்களுக்கு இந்த டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஸ்ரீவாரி சாலகட்ல தெப்போற்சவம் ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகளை 21-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான டோக்கன்கள் மாலை 3 மணிக்கும் வெளியிடப்படும்.
ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு 25-ந்தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
பக்தர்கள் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM