Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.)
மருத்துவ விடுப்பு மறுக்கப்பட்டு, பணி வழங்கப்படாததால் போக்குவரத்துக்கழக பொறியாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பொறியாளராக பணியாற்றி வந்த யுவராஜ் என்பவருக்கு மருத்துவ விடுப்பு மறுக்கப்பட்டதுடன், பணியும் வழங்கப்படாததால் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக யுவராஜ் கழுத்து வலியால் பாதிக்கப்பட்டு வந்தார். அவரால் பணிக்கு செல்ல முடியாத நிலையில் மருத்துவ விடுப்பு கோரியிருந்தார். ஆனால், அவரது மருத்துவ விடுப்பை அதிகாரிகள் ஏற்கவில்லை. மேலும் அவருக்கு பணி வழங்கவும் மறுத்துள்ளனர். இதனால் கடந்த 3 மாதங்களாக அவரது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், கடுமையான வறுமையிலும் வாடினார். ஒரு கட்டத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று தற்கொலை கடிதம் எழுதி வைத்து விட்டு தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அப்பாவி பொறியாளரின் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்கொலை செய்து கொண்ட யுவராஜின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ