Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 20 நவம்பர் (ஹி.ச.)
சிறுதுளி அமைப்பானது 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்று சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளை கோயம்புத்தூர் மற்றும் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.
இன்று 20 நவம்பர் 2025 சிறுதுளி அமைப்பானது கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை மற்றும் கரூர் வைஸ்யா வங்கியுடன் இணைந்து கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றின் முக்கிய அணைக்கட்டுகளான “புதுக்காடு மற்றும் கிழ்ச்சித்திரைச்சாவடி (குனியமுத்தூர்) அணைக்கட்டுகளை தூர்வாரி புனரமைக்கும் திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நிகழ்வில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் இ.ஆ.ப. முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு திட்டத்தை துவங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக கரூர் வைஸ்யா வங்கியின் சி.எஸ்.ஆர் தலைமை அலுவலர் திருமிகு. நதியா மாலி, சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன் மற்றும் நீர்வளத்துறையின் உதவிப்பொறியாளர் நல்லத்தம்பி மற்றும் தமிழ் நாடு விவசாய சங்க தலைவர்கள் சு. பழனிச்சாமி மற்றும் திரு.ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலைவகுத்தனர் . மேலும் சிறுதுளியின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நொய்யல் ஆற்றில் ஆண்டிற்கு நாற்பதற்கும் குறைந்த நாட்களே மழைநீர் ஓடுவதால் அதனை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்த, நம் முன்னோர்கள் அணைக்கட்டுகளை கட்டி, ஆற்றில் பாயும் நீரின் திசையை மாற்றி வாய்க்கால்கள் மூலம் குளம் மற்றும் குட்டைகளில் சேமித்து வைத்தனர்.
இது அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விவசாயம் செழிக்க மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர பெரும்பங்களித்தது. நாட்போக்கில் இந்த அணைக்கட்டுகளில் போதிய பராமரிப்பு மற்றும் தூர்வாரப்படாததால் வண்டல் மண் படிந்து மற்றும் வாய்க்கால்கள் புதர்களுடன் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாசன மதுகுகளை உபயோகிப்பதில் சிரமம் உள்ளது, இதன் விளைவாக விவசாயம் பாதிக்கப்படுகிறது.
இந்த புனரமைப்பு பணியானது, “நிலத்தடி நீர் வளம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்.இத்திட்டத்தின் மூலம் 65 மில்லியன் லிட்டர் (6.5 கோடி லிட்டர்) சேமிப்பு திறனை உயர்த்த முடியும்அணைக்கட்டு அருகிலுள்ள விவசாயிகளின் விவசாய உற்பத்தித் திறன் உயர்வு காணும்.சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு விரிவடையும்.
விளைச்சல் அதிகரிப்பின் காரணமாக பயிர் மாற்று முறைகளில் மாற்றங்கள் ஏற்படும்.இந்த திட்டத்தின் மூலம் 2093 ஏக்கர் பாசனப்பகுதியில் உள்ள 697 விவசாயிகள் நேரடியாகவும், மேலும் 2500 விவசாயிகள் மறைமுகமாகவும் பயன் பெறவுள்ளனர். 2697 திறந்த கிணறுகளும் 700 ஆழ்துளைக்கிணறுகள் நிரம்பி, நீர்மட்டம் மேம்படும். குளங்களில் மழைநீர் சேகரிக்கப்படும், நீர்தரம் மேம்படும் என திருமதி வனிதா மோகன் கூறினார் .
Hindusthan Samachar / V.srini Vasan