Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 நவம்பர் (ஹி.ச)
நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காமல், நிவாரணமும் அளிக்காமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி’களின் சார்பில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என திமுக எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை.
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் 23.11.2025 அன்று தஞ்சாவூரிலும், 24.11.2025 அன்று திருவாரூரிலும் காலை 10.00 மணியளவில் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ