Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 நவம்பர் (ஹி.ச.)
த.வெ.க.தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' போன்ற நிகழ்ச்சிகளுக்கு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவை ஏற்று, தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டங்களை நடத்தி, வரைவு வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்கியது.
இந்நிலையில் இன்று (நவ.,21) அரசியல் கட்சி கூட்டங்கள், ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்குவது தொடர்பான, வரைவு வழிகாட்டு விதிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.
அப்போது வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தங்கள் தரப்புக்கு வழங்க வேண்டும் என தவெக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கையை முன்வைத்தன. ஒவ்வொரு விதியையும், ஒவ்வொரு கட்சியும் எதிர்க்கும் என்பதால் நகல்களை வழங்க முடியாது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, மனுத்தாரர்களான தவெக, அதிமுக உள்ளிட்ட கட்சி தரப்பிற்கு நகல்களை வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையை நவம்பர் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / vidya.b