Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 நவம்பர் (ஹி.ச.)
சென்னை திருமங்கலத்தில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தியாகேஸ்வரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த ஷர்புதீன் என்பவருக்கு கஞ்சா விற்றது தெரியவந்தது.
ஷர்புதீன், சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' படத்தின் இணைத் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து ஷர்புதீன், சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் சரத், முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 10 கிராம் கஞ்சா, மற்றும் சுமார் 27 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில்,
சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஷர்புதீன் வீட்டில் வார இறுதிகளில் இரவு நேரங்களில் சினிமா பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்தி விருந்து நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், முன்னணி அரசியல் கட்சியின் வியூக வகுப்பு நிறுவனத்தில் ஷர்புதீன் பணியாற்றி வருவதும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 27 லட்சம் ரூபாய் பணம், அந்நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், கஞ்சா விற்பனையில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளதா? போதை விருந்தில் யார் யார் பங்கேற்றார்கள் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN