Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 நவம்பர் (ஹி.ச)
தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில், இன்று (நவ 22) கனமழை பெய்ய
வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் நேற்று காலை 7:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்கால், திருவாரூர் பகுதியில் தலா, 5 செ.மீ., நாகப்பட்டினத்தில் 4 செ.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு, வேளாங்கண்ணி பகுதி யில் தலா, 3 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.
இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 24ம் தேதி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், மேலும் வலுப்பெறக் கூடும்.
இதன் காரணமாக தமிழகத் தில் இன்று சில இடங்களிலும், நாளை தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் 24-ம் தேதி சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில் சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இன்று
(நவ 22) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b