Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 23 நவம்பர் (ஹி.ச.)
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று(நவ 23) நடைபெற்றது.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது:
நாட்டிற்காக உழைப்பதற்காகவே அண்ணாதுரை பிறந்தார். பொதுநலத்தில் தான் நாள் முழுவதும் கண்ணாக இருந்தார் என்று எம்ஜிஆர் பாட்டு ஒன்று பாடி இருக்கிறார். அதனை கேட்டு இருப்பீங்க, அப்படிப்பட்ட காஞ்சி தலைவர் அண்ணாதுரை பிறந்த மாவட்டம் தான் காஞ்சிபுரம் மாவட்டம்.
தன்னுடைய வழிகாட்டி என்பதால், தான் ஆரம்பித்த கட்சியின் கொடியில் அண்ணாதுரை படத்தை வைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அண்ணாதுரை ஆரம்பித்த கட்சி அதன் பிறகு கைப்பற்றியவர்கள் என்ன எல்லாம் பண்ணுகிறார்கள். நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியுமா என்ன மக்களே? உங்களுக்கு தான் அது நல்லா தெரியுமே?
தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், அவங்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாதுங்க, எந்த வாயக்கால் வரப்பு தகராறு எல்லாம் ஏதுமே கிடையாதுங்க, அப்படி இருந்தாலும் அதனை நாம் கண்டுகொள்ள போவது கிடையாது.
அவர்கள் வேண்டுமானால் எங்கள் மீது வன்மத்தோடு இருக்கலாம். நாங்கள் அப்படி இல்லை. ஆனால் உங்களை, என்னை, நம்ம எல்லோரையும் பொய் சொல்லி நம்பி வைத்து, ஓட்டு போட வஞ்சு ஏமாத்தினாங்க இல்ல, அப்படி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து, மக்களுக்கு நல்லது செய்வது போல் நடிக்கிறாங்க, நாடகம் ஆடிகிறார்கள், அவர்களை எப்படி நாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியும்?
அதனால் அவர்களை கேள்வி கேட்காமல் நாம் விட போவது இல்லை. இதனை காஞ்சிபுரம் மண்ணில் இருந்து சொல்கிறேன் என்றால், இந்த மண்ணுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது.
முதல் களப்பயணம் தொடங்கியது பரந்தூரில் இருந்து தான். இன்றைக்கு மன வேதனைக்கு பிறகு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்து இருப்பது காஞ்சிபுரம் மாவட்டம் தான். மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாதுரையை மறந்தது யார்?
மக்களுக்காக சட்டபூர்வமாக எல்லா நல்லவற்றையும் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த மக்களுக்காக செய்ய வேண்டும். அந்த ஒரே லட்சியத்தில் தான் அரசியலுக்கு வந்துள்ளோம். கொள்கை என்ன கிலோ என்ன, விலை என்ன கேட்கிற அளவுக்கு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சமத்துவம் சம வாய்ப்பு என்று கூறும் எங்களுக்கு கொள்கை இல்லை என்கிறார் முதல்வர்.
வக்பு சட்டத்தை எதிர்த்து முதலில் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்ற எங்களுக்கு கொள்கை இல்லையா? இவர்கள் கொள்கையே கொள்ளை தான்.
வாக்குறுதிகள்:
1.எல்லோருக்கும் நிரந்தர வீடு இருக்கணும்,
2.வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் இருக்கணும்
3.கார் லட்சியம். ஒவ்வொரு வீட்டிலும் கார் இருக்கும் வகையில் பொருளாதார மேம்பாடு
4.ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருக்கணும்
5.வீட்டில் குறைந்தபட்சம் ஒருவருக்கு நிரந்தர வருமானம்
6.அதற்கான வேலைவாய்ப்பு உருவாக்கணும்
7.அதற்கு தகுந்தபடி கல்வியில் சீர்திருத்தம்
8.அரசு மருத்துவமனைக்கு பயமின்றி நம்பி செல்லும் வகையில் வசதி
9.பருவமழையில் எதுவும் பாதிக்காமல் இருக்கும் வகையில் மேம்பாடு
10.மீனவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், அரசு
ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு பாதுகாப்பு, வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
11.தொழில் வளர்ச்சியில் கவனம் இருக்கும்.
12.சட்டம் ஒழுங்கு கண்டிப்புடன் இருக்கும்.
இதற்கான விரிவான திட்டங்கள் எல்லாம் எங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கும்.
யாரைப்பார்த்து தற்குறி என்கிறீர்கள்? இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தான் உங்கள் அரசியலை கேள்விக்குறி ஆக்கப்போகின்றனர்.
அவர்கள் தற்குறி அல்ல, ஆச்சர்யக்குறிகள். மாற்றத்துக்கான அறிகுறி.
இவ்வாறு விஜய் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b