Enter your Email Address to subscribe to our newsletters

கவுகாத்தி, 24 நவம்பர் (ஹி.ச.)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 81.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது.
செனுரன் முத்துசாமி 25 ரன்னுடனும், கைல் வெரைன் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 151.1 ஓவர்களில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக செனுரன் முத்துசாமி 109 ரன்களும், மார்கோ ஜான்சன் 93 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக 2-வது நாள் ஆட்டம் முன் கூட்டியே முடித்து கொள்ளப்பட்டுள்ளது.
ஜெய்ஸ்வால் 7 ரன்களுடனும், கே.எல். ராகுல் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 480 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.
Hindusthan Samachar / JANAKI RAM