Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 நவம்பர் (ஹி.ச)
இந்திய தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியலில் ஏற்படும் குளறுபடிகளை தடுக்கும் வகையில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 4-ந் தேதி முதல் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) தொடங்கின.
இதற்கிடையே தமிழகத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளை மதிப்பாய்வு செய்வதற்காக தமிழகத்திற்கு 3 நாட்கள், இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று (நவ 24) தமிழகம் வருகின்றனர்.
அவர்கள் இன்று (நவ 24) முதல் 26-ந் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று அங்கு நடக்கும் பணிகளை ஆய்வு செய்வார்கள். இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவு அதிகாரி பவன், தேவன்ஷ் ஆகியோர், எஸ்.ஐ.ஆர். தொடர்பான ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் பற்றி மதிப்பாய்வு செய்வார்கள். அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று கள ஆய்வையும் மேற்கொள்வார்கள்.
தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி, எஸ்.ஐ.ஆரின் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்வார். அவர் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்குச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணி, அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி ஆகியவற்றை மதிப்பாய்வு செய்யவுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மதுசூதன் குப்தா, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b