Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 24 நவம்பர் (ஹி.ச.)
4-வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அடுத்த மாதம் 2-ஆம் துவங்கி,15 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
சங்கமம் நிகழ்ச்சியின் முக்கிய கருப்பொருள், 'தமிழ் கற்போம்!' தமிழ் மொழியைக் கற்பதை நாடு முழுதும் கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கம். அதன்படி ஹிந்தி தெரிந்த, 50 தமிழக ஆசிரியர்கள் காசியில் உள்ள மாணவர்களுக்கு தமிழ் கற்பிப்பர்.
சங்கம நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து, 1,400 பேர் ஏழு பிரிவுகளாக பங்கேற்கின்றனர்.
எட்டு நாள் பயணமாக செல்லும் இந்த குழுவினர் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி போன்ற நகரங்களுக்கு செல்கின்றனர். அங்கு கலந்துரையாடல், கருத்தரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். இது தவிர உள்ளூர் உணவு மற்றும் கைவினை பொருள், பாரம்பரிய பொருட்கள் காட்சிபடுத்தப்படும்.
சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலை ஆகியவை உத்தர பிரதேச அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.
தமிழகத்துக்கும், காசிக்கும் இடையேயான கலாசார தொடர்பை கண்டறியும் வகையில் அகத்திய முனிவர் வாகன பயணம் நடத்தப்படுகிறது.
இது, டிச.2 -ல் தென்காசியில் துவங்கி 10ல் காசியில் நிறைவடைகிறது.
தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடத்தப்படுகிறது.
மேலும் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / Durai.J