Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 நவம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியை (எஸ்.ஐ.ஆர்) ரத்து செய்யக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
வைகோ சார்பில் ஆஜரான வக்கீல்கள் பி.சீனிவாசன், ஜி.ஆனந்த் செல்வம் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
18 வயது பூர்த்தியடைந்த இருபாலருருக்கு வாக்குரிமை அளிக்க வகை செய்யும் அரசமைப்பு சாசனத்துக்கு எதிராகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலுள்ள வாக்காளர் பட்டியல் திருத்த விதியை மீறுவதாகவும் உள்ளது. இதை கருத்தில் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம் கடந்த 27-ந்தேதி வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்யவேண்டும்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
வைகோ சார்பில் வக்கீல் முரளி ஆஜராகி, தமிழ்நாட்டில் நடைபெறும் எஸ்.ஐ.ஆரை எதிர்த்த மனுக்கள் நாளை விசாரணைக்கு வருவதால், இந்த மனுவையும் அவற்றுடன் இணைக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை ரத்து செய்யக்கோரிய ரிட் மனுவுக்கு பதில் அளிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர்
2-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.
Hindusthan Samachar / JANAKI RAM