Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 26 நவம்பர் (ஹி.ச.)
கோவை துடியலூரிலிருந்து சரவணம்பட்டி நோக்கிச் செல்லும் மக்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ரயில்வே கிராசிங்கை கடந்து கொண்டிருந்த நேரத்தில், எச்சரிக்கை மணி ஒலிக்காமல், எந்த அறிகுறியும் இன்றி ரயில்வே கேட் திடீரென கீழே விழுந்துள்ளது.
இதனால் கேட்டைத் தாண்ட முயன்ற வாகன ஓட்டிகள் தப்பி ஓடியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
கேட் கீழே விழுந்ததில் சில இருசக்கர வாகனங்கள் அடிபட்டாலும், பெரும் சேதம் ஏற்படாமல் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டமானதாக கூறப்படுகிறது.
சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்து ஓரங்கட்டினர். பின்னர் ரயில்வே பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக ஓடிவந்து கேட்டை மீண்டும் உயர்த்தி வாகனங்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேட் இயங்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறே காரணமாக இருக்கலாம் என ஆரம்ப நிலையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், எச்சரிக்கை மணி செயலிழப்பு மற்றும் கேட் இயந்திர பராமரிப்பில் குறைபாடு இருந்ததா என்பதை ரயில்வே பொறியியல் பிரிவு ஆய்வு செய்து வருகிறது.
கிராசிங்கில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கேட் திடீரென விழுந்தது மிகவும் ஆபத்தானது.
குழந்தைகள் அல்லது வயதானவர்கள் இருந்திருந்தால் பெரும் விபத்து நடந்திருக்க வாய்ப்பு உள்ளது, என்று அங்கே இருந்த ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து ரயில்வே துறை விரைவில் அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / V.srini Vasan