Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 3 நவம்பர் (ஹி.ச)
கோவையில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கோவையில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். பாலியல் குற்றங்களை தடுப்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க முனைந்தாலும் காவல்துறையினர் போதிய கண்காணிப்பும், விழிப்புணர்வும் இல்லாததால் இத்தகைய கொடுமை நடைபெற்று வருகிறது. பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்களை கைது செய்ய 7 தனிப்படைகளை காவல்துறை அமைத்திருக்கிறது. பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து இத்தகைய கோர நிகழ்வுகள் இனியும் நடைபெறாமல் இருக்க இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
மேலும் குற்றங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க இளைஞர்களிடையே காவல்துறையினர் அச்ச உணர்வை ஏற்படுத்துவதோடு, மகளிருக்கு உரிய பாதுகாப்புகளை வழங்க வேண்டும். இனி எவரும் சுலபமாக இத்தகைய வன்கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர், காவல்துறையினருக்கு உரிய ஆணைகளை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் முழு மருத்துவ சிகிச்சைக்கான செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ