Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 3 நவம்பர் (ஹி.ச.)
தெரு நாய் தொல்லை விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விடுவிக்க கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டு இருந்தது.
மேலும் இந்த விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இணக்க அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவும் அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் டெல்லி மாநில அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தன.
பின்னர் இந்த வழக்கு கடந்த 27-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்கள் கோர்ட்டில் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அவர்கள் காணொலி மூலம் ஆஜராக அனுமதி கேட்டதையும் கடந்த 31-ந் தேதி நீதிபதிகள் நிராகரித்தனர்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரிக்கப்படுகிறது.
அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM