Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 30 நவம்பர் (ஹி.ச.)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (டிச 1) தொடங்குகிறது. இந்த சூழ்நிலையில், டில்லியில் இன்று (நவ.,30) அனைத்துக் கட்சி கூட்டம் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கவுரவ் கோகோய், திமுக எம்பி டி.ஆர்.பாலு, திரிணமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தவும், ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன் வைத்து ஒத்துழைப்பு தருமாறு எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
ஆனால் டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரில், ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமா செய்த பின், துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிக்கு வந்துள்ள நிலையில் நடைபெறவுள்ள முதல் கூட்டத்தொடர் இது ஆகும்.
எனவே, ராஜ்யசபா தலைவர் என்ற முறையில் சபையை அவர் எவ்வாறு வழிநடத்திச் செல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b