Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 30 நவம்பர் (ஹி.ச.)
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பாஜக விளையாட்டு துறை சார்பில் மாநில அளவில் செஸ் போட்டிகள் இன்று நடத்தப்படுகிறது. இதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு துறை தலைவர் நயினார் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய வானதி சீனிவாசன்,
குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்து அனைத்து மக்களும் வாங்குகின்ற விதத்தில் செய்தவர் பிரதமர் மோடி என தெரிவித்தார்.
முன்பெல்லாம் கிராமப்புற இளைஞர்களுக்கு போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், தற்பொழுது அதையெல்லாம் மாற்றி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் என்ற முயற்சியின் காரணமாக மத்திய இளைஞர் நல மேம்பாட்டு துறை போட்டிகளை நடத்தி கிராமப்புற விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி வருவதாக தெரிவித்தார்.
செஸ் விளையாட்டிற்கு மிகப்பெரிய உதவியை செய்தது மத்திய அரசு என்றும் பிரதமர் மோடியே தமிழகத்திற்கு வந்து அதனை துவக்கி வைத்ததாகவும் தெரிவித்தார்.
தமிழக செஸ் விளையாட்டு வீரர்கள் உலக அளவில் பிரபலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தற்பொழுது இங்குள்ள குழந்தைகள் விஸ்வநாத் ஆனந்த், பிரக்யாநந்தா ஆகியோரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் பாஜக சார்பில் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கிராமப்புறங்களிலும் இளைஞர்களிடம் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்டேடியம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது என தெரிவித்த அவர் அதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தரமான விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கோவையில் பாரா ஒலிம்பிக் வீரர்களின் பயிற்சிக்காக நான் தந்து சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 2 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்த பொழுதிலும் தமிழக அரசு அதற்கான நிலத்தை ஒதுக்கி தராததால் அந்த தொகையை மாற்றுப் பணிகளுக்கு செலவிட நேர்ந்ததாக தெரிவித்தார்.
பிரதமர் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கக்கூடிய தனிக்கவனத்தின் காரணமாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் உட்பட கிரிக்கெட்களில் கூட பெண்கள் அணி கோப்பையை வென்றுள்ளது அவர்களுக்கு தரமான பயிற்சியை உலக தரத்தில் வழங்குவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என தெரிவித்தார்.
தமிழகத்தில் மழை பாதிப்பு நடவடிக்கை என்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல என்றும் விவசாயிகள் மழையினால் பாதிக்கப்படும் பொழுது இழப்பீடு வழங்குவதில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது அதனால் பயிர் காப்பீடு செய்திருந்தாலும் கூட முழுமையான பலனை விவசாயிகள் எடுக்க முடியாமல் உள்ளது என தெரிவித்தார்.
எனவே மழைக்கு முன்பு எடுக்கப்படும் நடவடிக்கைகளுடன் சேர்த்து அதற்கு பின்பு ஏற்படும் பாதிப்பு இழப்பீடுக்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலகியது பாஜகவின் சித்து விளையாட்டு என்று திருமாவளவன் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,
தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் விளைவிக்க வேண்டும் நாங்கள் பலவீனம் அடைந்தவர்கள் போன்று மக்களிடம் காட்ட வேண்டும் என்று அவர்கள் முயற்சிப்பதாகவும் அது திருமாவளவனுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் என்றார். மேலும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி தான் 2026 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் மக்களிடம் எங்கள் கூட்டணிக்கு வாக்குகளை அதிகமாக பெறுவது தான் எங்களுடைய அசைன்மென்ட் எனவும் தெரிவித்தார்
Hindusthan Samachar / V.srini Vasan