Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 4 நவம்பர் (ஹி.ச.)
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கிற்கு சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூரில் சிபிஐ விசாரணை கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.
குறிப்பாக எஸ்ஐடி குழுவிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களை வைத்து, எஸ்.பி பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையை தொடங்கினர்.
தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக வேலுச்சாமிபுரம் சம்பவ இடத்தில் 3டி டிஜிட்டல் ஸ்கேனர் உதவியுடன் சம்பவ இடத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள் வேலுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் என இதுவரை 25-க்கும் மேற்பட்ட நபர்களிடம் காட்சியங்கள் பெறுவதற்கான விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று கரூர் சிபிஐ அலுவலகத்தில் சம்பவம் நடந்தபோது, வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 12 காவலர்கள் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகினர்.
அந்த 12 காவலர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் கடந்த 4 மணி நேரமாக விசாரணை நடத்தினர். தற்போது 12 காவலர்களும் உணவு இடைவேளைக்கு சென்ற நிலையில், ஏற்கனவே சம்பவ தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 உதவி ஆய்வாளர்களுக்கும் சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் 7 உதவி ஆய்வாளர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN