Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 4 நவம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீதாநகரைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (வயது 61) என்பவர், அரசுப் பேருந்து டிரைவராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில், அவர் 10 வயது பள்ளி மாணவனை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த சிறுவன், சம்பவத்தை தன் பெற்றோரிடம் வெளிப்படுத்தியதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார், ஆரோக்கியதாஸை எதிர்த்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கு, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சாட்சிகள், ஆதாரங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டபின், நீதிபதி கோகிலா தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில், சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளி ஆரோக்கியதாஸுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அரசு தரப்பில், வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.
இந்த தீர்ப்பு, சிறுவர் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை மணியாகவும் அமைந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN