Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 5 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி-திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலை முக்காணியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுமார் 71 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்தது.
மழைவெள்ளக்காலத்தில் ஆற்றிலிருந்து சில அடி உயரம் கொண்ட இந்த பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.
இதை தொடர்ந்து இந்த பாலத்திற்கு அருகிலேயே ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்டப்பாலம் கட்டப்பட்டு, கடந்த 2019-ம் ஆண்டு போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.
இந்த பாலத்தில் போக்குவரத்து சீராக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணியில் திறந்து விடப்பட்ட பல லட்சம் கனஅடி தண்ணீர் பழைய பாலத்தை மூழ்கடித்துடன், உயர்மட்ட பாலத்தையும் தொட்டு சென்றது.
தொடர்ந்து பல நாட்கள் பாலத்தை தொட்டவாறு வெள்ளம் சென்ற நிலையில், 14 தூண்களை கொண்ட இந்த பாலத்தில் 6-வது மற்றும் 7-வது தூண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தொய்வு ஏற்பட்டு, பழுதடைந்தது.
இதை தொடர்ந்து அந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மீண்டும் பழைய பாலம் சீரமைக்கப்பட்டு, சேதமடைந்த தடுப்பு சுவருக்கு பதிலாக கம்பிகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
பழுதடைந்த புதிய பாலத்தில் சில வாகனங்கள் சென்று வந்த நிலையில், பழுதடைந்த இந்த பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்து வாகன போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்க பரிந்துரை செய்தனர்.
இதை தொடர்ந்து அந்த பாலத்தின் இருபுறத்திலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, முற்றிலுமாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த பாலமும் முடங்கி கிடக்கிறது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த தூத்துக்குடி-திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் முடக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி, போக்குவரத்துக்கு திறக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைதொடர்ந்து, இந்த பாலத்தில் சீரமைப்பு பணிக்காக ரூ.3 கோடி நிதியை சென்னை தேசிய நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் ஒதுக்கீடு செய்தார்.
இந்த நிதியில் உயர்மட்ட பாலத்தில் சீரமைப்பு பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. தொடர்ந்து பாலத்தில் சேதமடைந்த பகுதியை அகற்றிவிட்டு, புதிதாக கட்டுமான பணியை மேற்கொள்ள ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b