Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 5 நவம்பர் (ஹி.ச.)
கோவை, தடாகம் - பன்னிமடை பகுதியில் உணவு தேடி உலா வரும் ஒற்றைக் காட்டு யானை வேட்டையன், தோட்டத்து வீட்டிற்குள் நுழைய முயன்றது.
இதனை கண்ட அங்கு இருந்தவர்கள் பட்டாசுகளை வெடித்ததால், சத்தத்தை கேட்டு திரும்பி ஓடியது. அதன் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
கோவை, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கிராமப் பகுதிகளில் உணவு தேடி வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து வீடுகள், விளை நிலங்கள் மற்றும் கால்நடைகளுக்கு வைத்து இருக்கும் உணவுப் பொருட்களை சூறையாடி உண்டு சேதப்படுத்தி செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனை தமிழக அரசு மற்றும் வனத்துறையினர் தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக வனத் துறையினரும் வேட்டை தடுப்பு காவலர்களைக் கொண்டு பல்வேறு குழுக்கள் அமைத்து தொடர்ந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொண்டாமுத்தூர், நரசிபுரம் ஆகிய பகுதிகளில் மனிதர்களைக் கொன்று அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற ஒற்றைக் காட்டு யானையை கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.
அதன் பிறகு வனப்பகுதியில் இருந்து தொண்டாமுத்தூர், ஆலாந்துறை சுற்று வட்டார பகுதியில் ஒற்றைக் கொம்பன் என்ற காட்டு யானையும், தடாகம், பன்னிமடை சுற்று வட்டார பகுதியில் வேட்டையனும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் உணவு தேடி ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 10.50 மணி அளவில் துடியலூர் அடுத்த பன்னிமடையில் இருந்து வரப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள அவிநாசிலிங்கம் கல்லூரி அருகே பூவரச மரத் தோட்டம் பகுதியில் சுரேஷ் என்பவர் தோட்டத்து வீட்டிற்கு உணவு தேடி ஒற்றைக் காட்டு யானை வேட்டையன் நுழைய முயன்றது. அதனை அங்கு இருந்த நாய்கள் முதலில் கண்டு குரைத்தது. இதனைக் கண்ட அங்கு இருந்தவர்கள் அங்கும், இங்கும் ஓடினர். பின்னர் தீபாவளிக்கு வாங்கி இருந்த மீதம் இருந்த பட்டாசுகளை வெடிக்கச் செய்தனர். பட்டாசு சத்தத்தை கேட்டு மீண்டும் திரும்பி வனப்பகுதியை நோக்கி ஓடியது அந்த ஒற்றைக் காட்டு யானை வேட்டையன்.
கால்நடைகளுக்கு வைத்து இருக்கும் தீவனங்கள் மற்றும் உணவுப் பொருட்களை ருசி கண்டு பழகிய வேட்டையன் மீண்டும், மீண்டும் அப்பகுதியில் உலா வருவதால், அச்சத்தில் ஆழ்ந்து உள்ள அப்பகுதி மக்கள் அதனை தடுத்து நிறுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / V.srini Vasan