நிசார் செயற்கைக்கோள் நாளை செயல்பாட்டுக்கு வருவது பற்றி அறிவிப்பு வெளியாகும் - இஸ்ரோ தலைவர் தகவல்
புதுடெல்லி, 6 நவம்பர் (ஹி.ச.) அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் இஸ்ரோ இணைந்து நிசார் செயற்கைக்கோளை பெரும் பொருட்செலவில் உருவாக்கி உள்ளது. புவி கண்காணிப்பு பணிக்காக வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், பூமியின் நிலம் மற்றும் பனி பரப்ப
நாளை நிசார் செயற்கைக்கோள் செயல்பாட்டுக்கு வருவது பற்றி அறிவிப்பு வெளியாகும் என இஸ்ரோ தலைவர் தகவல்


புதுடெல்லி, 6 நவம்பர் (ஹி.ச.)

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் இஸ்ரோ இணைந்து நிசார் செயற்கைக்கோளை பெரும் பொருட்செலவில் உருவாக்கி உள்ளது.

புவி கண்காணிப்பு பணிக்காக வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், பூமியின் நிலம் மற்றும் பனி பரப்புகளை ஒவ்வொரு 12 நாட்களுக்கு ஒரு முறை கண்காணிக்கும் திறன் பெற்றது.

இந்நிலையில், வளர்ந்து வரும் அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான கூட்டம் நடந்தது. இதில், இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டார்.

நிசார் செயற்கைக்கோள் தொடர்பாக அவர் இந்த கூட்டத்தில் கூறும்போது, ஒட்டுமொத்த தகவல் துல்லிய தன்மைக்கான பகுப்பாய்வு முழுமையடைந்து விட்டது.

இந்த செயற்கைக்கோளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது பற்றி வருகிற 7-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் அறிவிக்க இருக்கிறோம் என பெருமிதத்துடன் கூறினார்.

அனைத்து தகவல்களும் மிக சிறப்பாக உள்ளன. ஒவ்வொரு 12 நாட்களுக்கு ஒரு முறை, புவி ஆய்வு செய்யப்படும். அதிக பயன் வாய்ந்த செயற்கைக்கோளாக இது இருக்கும் என்றும் அவர் கூறினார்.

2,392 கிலோ எடை கொண்ட நாசா-இஸ்ரோ செயற்கைத்துளை ரேடார் (நிசார்) என்ற அதிநவீன செயற்கைக்கோள் ரூ.11,284 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் ஆண்டு பட்ஜெட் இதுவரை ரூ.11,284 கோடியாக (1.3 பில்லியன் டாலர்) உள்ளது. இந்த செயற்கைக்கோளின் விலையும் அதற்கு இணையாக உள்ளது. கடந்த ஜூலை 30-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

51.7 மீட்டர் நீளம் கொண்ட இந்த ராக்கெட், சென்னையில் இருந்து 135 கி.மீ. கிழக்கே, கடலோரத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு, 19 நிமிடங்களில், வரையறுக்கப்பட்ட வட்டபாதையை அடைந்தது.

இதுவரை ஏவப்பட்ட 500-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களைவிட இந்த நிசார் செயற்கைக்கோள் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. பேரிடர் மேலாண்மை, விவசாயம், காலநிலை கண்காணிப்பு ஆகியவற்றை இந்த செயற்கைக்கோள் மூலம் துல்லியமாக கணிக்க முடியும்.

அதாவது, பூமியில் ஒரு செ.மீ. நீள அசைவை கூட மிக துல்லியமாக இந்த செயற்கைக்கோளில் உள்ள அதிநவீன கேமராக்கள் படம் எடுத்து விடும். இந்த படங்களை 12 நாட்களுக்கு ஒருமுறை பூமிக்கும் அனுப்பும்.

இதற்காக எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் இந்த செயற்கைக்கோளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது சுற்றுச்சூழல் அமைப்பு இடையூறுகளை தொடர்ந்து கண்காணிக்கும். பூகம்பங்கள், சுனாமிகள், எரிமலை வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை ஆபத்துகளை மதிப்பிட உதவும்.

குறிப்பாக, பூமியின் மேல் அடுக்கு மற்றும் மேற்பரப்பு இயக்கத்தில் ஏற்படும் நுட்பமான மாற்றங்கள், கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் கண்காணிப்பு, பயிர் நில வரைபடம் மற்றும் மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றையும் ஆராய்ந்து தரவுகள் தரும்.

இந்த செயற்கைக்கோளில் 2 அலைவரிசைகள் கொண்ட கருவிகள் இடம்பெற்றுள்ளன.

செயற்கைக்கோள் ஒன்று இவ்வாறு அமைவது இதுவே முதல் முறையாகும்.

Hindusthan Samachar / JANAKI RAM