திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் உள்வாங்கியது
தூத்துக்குடி, 6 நவம்பர் (ஹி.ச.) முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொ
திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் உள்வாங்கியது


தூத்துக்குடி, 6 நவம்பர் (ஹி.ச.)

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

குறிப்பாக திருவிழா நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களிலும் பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முருகனை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோயில் முன்புள்ள கடலில் புனித நீராடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

சமீப காலமாக கோயில் முன்புள்ள கடல் பருவநிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைமைக்கு திரும்புவதும் வாடிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடல் நீர் உள்வாங்கியும் காணப்படும்.

இந்த நிலையில் நேற்று (நவ 06) பவுர்ணமி தினமாகும். இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சுமார் 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது.

இதனால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் (நவ 06) நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் வரை கரையில் இருந்து கடல் 80 அடி உள்வாங்கி உள்ளது.

இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கடல் உள்வாங்கி உள்ளதால் பக்தர்கள் கடலில் குளிக்க சற்று சிரமம் அடைந்துள்ளனர்.

கடல் உள்வாங்கி காணப்படுவதால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவு வெளியே தெரிகின்றன. அதன் மேல் நின்று பக்தர்கள் புகைப்படம் எடுப்பது, செல்ஃபி எடுப்பது என்று ஆபத்தை உணராமல் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும், சிலர் கடல் உள்வாங்கி காணப்படும் பகுதியில் அந்த 80 அடியை தாண்டியும் கடலுக்குள் சென்று நீராடி வருகின்றனர்.

ஆபத்தை உணராமல் கடலில் குளிக்கும் பக்தர்களை கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பாக நீராட அறிவுறுத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b