Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 6 நவம்பர் (ஹி.ச.)
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த சில மாதங்களாகவே திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழிலதிபர்கள் என பலரும் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சாமி 2, பீட்சா, சூது கவ்வும், இந்தியன் 2, ஜிகர்தண்டா உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த பிரபலமான திரைப்பட நடிகர் பாபிசிம்ஹா இன்று தனது 43-வது பிறந்த நாளை ஒட்டி அருணாசலேஸ்வரர் கோவில் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக சம்பந்த விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து கோவில் முன் சாஷ்டாங்கமாக விழுந்து சாமி தரிசனம் செய்தவர் கோவிலில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் மேற்கொண்டார்.
தொடர்ந்து யாக சாலையில் சாமி தரிசனம் மேற்கொண்ட அவருடன் கோவில் ஊழியர்கள் பக்தர்கள் என பலரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
திரைப்பட நடிகர் பாபிசிம்ஹாவிற்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN