Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.)
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் புதிய பாடத்திட்டத்திற்கான உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை-2025ன் அடிப்படையில் 2017ல் அமைக்கப்பட்ட உயர்மட்டக் கல்விக் குழுவை மாற்றி அமைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் புதிய கலைத்திட்ட உயர் மட்ட வல்லுநர் குழுவை அமைத்து ஆணையிட வேண்டும் என்று அரசிடம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதை ஏற்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் புதிய பாடத்திட்டத்திற்கான உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, குழுவின் தலைவராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இருப்பார். துணைத் தலைவராக அரசு முதன்மைச் செயலாளர், உறுப்பினர்களாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் நாராயணன், கணித அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் பேராசியர் ராமானுஜம், பேராசிரியர் மாடசாமி, சென்னை மாநிலக் கல்லூரியின் வணிகவியல் துணை இணைப் பேராசிரியர் செசிஸ்டாஸ்டன்,
கலிபோர்னியா பல்கலைக் கழக உயிரியல் வல்லுநர் அழகிய சிங்கம், சென்னை இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் சவுமியா, இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். அதேபோல, புதிய கலைத்திட்ட வடிவமைப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைவராகக் கொண்டு, உறுப்பினர்களாக தொல்லியல் வல்லுநர் ராஜன் உள்ளிட்ட இந்த குழுவில் இடம் பெறுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b