Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 8 நவம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம், முன்னீரபள்ளம் காவல் நிலைய சரகம், கொங்கந்தான்பாறையில் கடந்த 2013 ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே, ஏற்பட்ட பிரச்சனையின், முன் விரோதம் காரணமாக வீரளபெருஞ்செல்வியை சேர்ந்த இசக்கிபாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டார் .
இந்த சம்பவம் தொடர்பாக, முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், குற்றவாளிகளான பஞ்சாண்டி (எ) பேதுரு மணி (40), இன்பராஜ் (எ) எட்வர்ட் இன்பராஜ் (40), முத்துக்குமார் (38) ஆகிய மூவருக்கும் எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி ராபின்சன் அவர்களால் இன்று குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 1,500/- அபராதமும் விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில், திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த சேரன்மகாதேவி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் , காவல் ஆய்வாளர் திரு. வேல்ராஜ் மற்றும் முன்னீர்பள்ளம் காவல்துறையினரையும், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த, அப்போதைய காவல் ஆய்வாளர் சந்திரசேகர் (தற்போது மானூர் காவல் நிலையம்), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் சூரசங்கரவேல் அவர்களையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன்.வெகுவாக பாராட்டினார்.
2025 ஆம் ஆண்டில் மட்டும், இதுவரை 23 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும்,75 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 22 பேர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN