Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு, நீலாங்கரையில் உள்ள விஜய் வீடு, அமெரிக்க தூதரக அலுவலகம், சென்னை விமான நிலையம் என பல இடங்களுக்கும் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
இதே போல் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு கடந்த மாதம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், 2வது முறையாக இன்று(நவ 09) சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.
அதேபோல, சென்னை தி.நகர் திலக் தெருவில் உள்ள பாமக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அங்கும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற் கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b