Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 நவம்பர் (ஹி.ச.)
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி (13.10.2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந் நிலையில் 12 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னையை அடுத்துள்ள பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கடந்த 3-ஆம் தேதி சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.
இந் நிலையில் த.வெ.க.வின் திருச்சி மண்டல இணை செயலாளரும், வழக்கறிஞருமான அரசு என்பவரும், பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் குரு சரண் என்பவரும் நேற்று (08.11.2025) பிற்பகல் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர்.
அவர்களிடம் மீண்டும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில்,விஜய் பரப்புரை மேற்கொண்ட போது பிரச்சார வாகனத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் பதிவுகளையும் அவர்கள் தாக்கல் செய்தாக தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் இன்று (09.11.2025) குரு, சரண் மற்றும் மூன்றாவதாக நபராக ஒருவர் என 3 பேர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
மீண்டும் விஜய்யின் பிரசார வாகன காட்சிகள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Hindusthan Samachar / vidya.b