Enter your Email Address to subscribe to our newsletters

புதுடில்லி, 9 நவம்பர் (ஹி.ச.)
புது தில்லி-ஷாங்காய் இடையிலான பயணிகள் விமானத்தை சைனா ஈஸ்டா்ன் என்ற சீன விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 9) இயக்க உள்ளது.
இதன்மூலம் இந்தியாவுக்கு நேரடி விமான சேவையை சீனா தொடங்க உள்ளது.
இந்தியா-சீனா இடையிலான பயணிகள் விமான சேவை 2020-ஆம் ஆண்டு கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னா், அந்தச் சேவையை மீண்டும் தொடங்காததற்கு கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாட்டு ராணுவத்தினா் இடையே நிலவிய மோதல்போக்கு காரணமாக அமைந்தது.
இந்த மோதல்போக்கு கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இதைத் தொடா்ந்து, இந்தியா-சீனா இடையே விமான சேவையைத் தொடங்க இரு நாடுகளும் முடிவு செய்தன.
இதையடுத்து, கடந்க அக். 26-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு விமானத்தை இயக்கி, 5 ஆண்டுகளுக்குப் பின்னா் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் விமான போக்குவரத்தை இண்டிகோ விமான நிறுவனம் முறைப்படி தொடங்கியது.
இந்நிலையில், புது தில்லியில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகருக்கு சைனா ஈஸ்டா்ன் என்ற சீன விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் விமானத்தை இயக்க உள்ளது.
புது தில்லியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்குப் புறப்படும் அந்த விமானம், திங்கள்கிழமை அதிகாலை ஷாங்காய் சென்றடைய உள்ளது.
இந்த விமானத்தில் ஷாங்காய் வரும் பயணிகளை அங்குள்ள இந்தியாவின் துணைத் தூதா் பிரதிக் மாதுா் வரவேற்க திட்டமிட்டுள்ளாா்.
பின்னா், அந்த விமானம் ஷாங்காயிலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு, மாலை 6 மணிக்கு புது தில்லி வந்தடைய உள்ளது.
ஒருநாள் விட்டு ஒருநாள் அந்த விமானம் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு நேரடி விமான சேவையை சீனா தொடங்க உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM