Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 9 நவம்பர் (ஹி.ச.)
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அகர சேத்தூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ பிரதாப சிம்மேஷ்வரர் ஆலய நூதன மூன்று நிலை இராஜ கோபுரம் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பழமை வாய்ந்த இவ்வாலய கும்பாபிஷேகம் கடந்த 2019ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு நூதன இராஜ கோபுரம் திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று கும்பாபிஷேக விழா கடந்த 06ம் தேதி காலை கணபதி ஹோமமும், மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
இன்று அதிகாலையில் யாகசாலை பூஜை மகா பூர்ணாகுதியுடன் நிறைவுபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. யாக சாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலய இராஜ கோபுர விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ பிரதாப சிம்மேஷ்வரர், ஸ்ரீ சிவகாமி சுந்தரி அம்பாள் உள்ளிட்ட மூலவர்களுக்கு மகாபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் திருப்பணிக்குழு, அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN