Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.)
வங்கக்கடலில் உருவான, 'டிட்வா' புயல் நகரும் வேகம் குறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுவிழந்தது.
இதனால், தமிழகத்தில் வடமாவட்டங்களுக்கான கனமழை அபாயம் விலகியது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக காரைக்காலில், 19 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் 17; நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையில் தலா, 15; சீர்காழி, திருவாரூர் பகுதிகளில் தலா, 14; ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், தொண்டி.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் ஆகிய இடங்களில், தலா, 13; நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை, வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், கடலுார் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதிகளில், தலா 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
180 கி.மீ., தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய, 'டிட்வா' புயல், வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தமிழக வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் நிலவியது.
புதுச்சேரிக்கு தென்கிழக்கே, 110 கி.மீ., மற்றும் வேதாரண்யத்துக்கு வடகிழக்கில், 140 கி.மீ., சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கில், 180 கி.மீ., தொலைவில், இந்த புயல் நிலை கொண்டிருந்தது. இது, தமிழக வட மாவட்டங்களுக்கு இணையாக, வடக்கு திசையில் நகர்ந்து கொண்டிருந்தது.
வலுவிழக்கும் இதன் காரணமாக, தமிழகத்துக்கும், புயலுக்கும் இடைப்பட்ட தொலைவு, 30 கி.மீ., வரை குறையக்கூடும். இதனால், 'டிட்வா' புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழந்தது.
தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 6ம் தேதி வரை, சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும், சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM