Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 11 டிசம்பர் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வருகிற 19-ந் தேதி நடைபெறவுளள்து.
விழாவை முன்னிட்டு 18-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம்,காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலயசாமிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சகால தீபாராதனை, இரவு 7 மணிக்கு காலபைரவருக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஒரு லட்சம் லட்டு தயார் செய்யப்படுகிறது. இதற்கான பணி இன்று (டிச 11) கோவிலில் தொடங்கியது.
கோவில் கண்காணிப்பாளர் ஆனந்தன் தலைமையில், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், திருக்கோவில் தலைமை அலுவலகப் பணியாளர் செல்வி ஆகியோர் லட்டு தயாரிக்கும் பணியினை தொடங்கி வைத்தனர்.
பறக்கையை சேர்ந்த பத்மநாபன் போர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக 1.5 டன் கடலை மாவு, 4 டன் சீனி, 150 டின் எண்ணெய், 100 கிலோ முந்திரி பருப்பு, 20 கிலோ ஏலக்காய், 15 கிலோ கிராம்பு ஆகியவை பயன் படுத்தப்படுகின்றன.
Hindusthan Samachar / vidya.b