Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 11 டிசம்பர் (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.
இதனையடுத்து முதற் கட்ட வாக்குப்பதிவு திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் (டிச 09) நடைபெற்றது.
இதில் 3 மாநகராட்சிகள், 39 நகராட்சிகள், 7 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 471 ஊராட்சிகளில் 11 ஆயிரத்து 166 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 36 ஆயிரத்து 630 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதன்படி முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 70.91 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (டிச 11) நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு தங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் காலையில் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வரிசையின் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார்.
தேர்தலுக்காக 7 மாவட்டங்களில் மொத்தம் 18,274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் 2,055 வாக்குச்சாவடிகள் பதற்றம் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 72 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இரு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் நாளை மறுநாள்
(டிச 13) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Hindusthan Samachar / vidya.b