Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 11 டிசம்பர் (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு இன்று(டிச 11) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதன்படி sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும், டிச. 26ம் தேதி 30 ஆயிரம் பேருக்கும், 27-ம் தேதி 35 ஆயிரம் பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பாட் புக்கிங்கில் தலா 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் சபரிமலை தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மண்டல பூஜையின்போது, திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 450 சவரன் எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவித்து மண்டல பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சபரிமலையில் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி தங்க அங்கி 23-ந் தேதி காலை 7 மணிக்கு ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக சபரிமலை நோக்கி புறப்படுகிறது.
அன்று இரவு ஓமல்லூரிலும், 24-ந் தேதி இரவு கோண்ணியிலும், 25-ந் தேதி பெரிநாட்டிலும் ஊர்வலம் தங்குகிறது. பின்னர் ஊர்வலம் 26-ந் தேதி மதியம் பம்பை கணபதி கோவிலில் வந்து சேரும். அங்கிருந்து தங்க அங்கியை மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்வார்கள்.
அன்று மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் அதனை 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பெற்றுக் கொள்வார்.
தொடர்ந்து 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். இதையடுத்து அலங்கார தீபாராதனை நடைபெறும்.
தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படுவதையொட்டி 26-ந் தேதி பிற்பகலில் 18-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மறுநாள் 27-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை நடைபெறும்.
27-ந் தேதி பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.
3 நாட்கள் ஓய்வுக்கு பிறகு மகர விளக்கையொட்டி அய்யப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.
பிரசித்திப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி நடைபெறவுள்ளது.
Hindusthan Samachar / vidya.b