Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 டிசம்பர் (ஹி.ச.)
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தினமும் காலை உணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையை முறையாக செயலியில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
காலை உணவுத் திட்ட செயலியை தினமும் கண்காணிக்கும் போது, நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள 4,327 பள்ளிகளில் பதிவு செய்துள்ள நிலையில் 4 லட்சத்து 68,544 மாணவர்களில், 2 லட்சத்து 87,997 (60 சதவீதம்) பேர் மட்டுமே உணவு சாப்பிட்டதாக தரவும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு குறைந்த சதவீதம் பதிவாகுவதற்கு செயலியில் உணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையை சரியாக பதிவிடாதது காரணமாக கண்டறியப்பட்டது. செயலியில் நவம்பர் 1 முதல் 21ம் தேதி வரையான பதிவுகளை ஆய்வு செய்தபோது 584 பள்ளிகளில் தரவு தாமதமாக பதிவேற்றப்பட்டதும், 478 பள்ளிகளில் எந்த தரவும் பதிவேற்றப்படாததும் தெரியவந்தது. மறுபுறம் செயலியில் பதிவேற்றப்பட்ட எண்ணிக்கை அடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஒருங்கிணைந்த சமையலறை பொறுப்பாளர்கள், சம்பந்தப்பட்ட மையப் பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி பொறுப்பாளர்கள், தினமும் காலை உணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையை சரியாக செயலியில் பதிவு செய்ய வேண்டும். இதுசார்ந்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b