Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 14 டிசம்பர் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகேயுள்ள ஏகனிவயல் தேடாக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி தெய்வானை (46). இருவரும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காவல் சரகம் ஊமத்தநாடு கிராமத்தில் தங்கள் உறவினர் வீட்டில் நடந்த புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காலை ஒரு பைக்கில் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
அப்போது காலை 10.40 மணிக்கு ரெட்டவயல் கடந்து கொலக்குடி பாவேந்தர்புரம் மாந்தோப்பு அருகே சென்றபோது காஸ்ட்லியான ஒரு பைக்கில் வந்த (22 வயது மதிக்கத்தக்க) இரு இளைஞர்கள் தெய்வானை கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்க ஆரத்தை அறுத்துக் கொண்டு வேகமாக பறந்துவிட்டனர்.
தங்க நகையை பறித்துச் சென்ற இளைஞர்களின் பைக் அதிவேகமாகச் சென்றதால் சண்முகத்தின் பைக்கால் விரட்டி பிடிக்க முடியவில்லை. உடனே தெய்வானை பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பேராவூரணி போலீசார் அந்த வழியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.
ஒரு சில கேமராக்களில் நகைகளை பறித்துச் சென்ற இளைஞர்களின் முகங்கள் பதிவாகி உள்ளது. மேற்பனைக்காடு, கீரமங்கலம், கொத்தமங்கலம் வரை உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சில பதிவுகளையும் கைப்பற்றி அந்த இளைஞர்களை தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் தங்க நகைகளை பறித்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் சென்றுள்ளனர்.
அவர்களை பிடிக்க பேராவூரணி போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN