Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 16 டிசம்பர் (ஹி.ச.)
புதுவை மாநிலத்தில் தற்போது மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோவும், சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோவும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, முதல்வர் ரங்கசாமி மீண்டும் இலவச அரிசி திட்டத்தை ஜனவரி மாதம் முதல் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் செயல்படுத்தினார்.
இந்த நிலையில், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மாதந்தோறும் தலா 2 கிலோ கோதுமை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திட்டத் தொடக்க விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி,
முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டசபையில் அறிவித்தபடி மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ அரிசியும், சிவப்பு கார்டுகளுக்கு 20 கிலோ அரிசியும் தொடர்ந்து வழங்கப்படும்.
அத்துடன் 2 கிலோ கோதுமையும் கூடுதலாக வழங்கப்படும். அடுத்த மாதம் ஜனவரி 3-ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
சட்டசபையில் அறிவித்த மகளிர் உரிமைத்தொகையை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி வருகிறது. இலவச அரிசி, கோதுமை மற்றும் பொங்கல் தொகுப்பில் ஏதேனும் குறை இருந்தால் சொல்லலாம்.
மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN