Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 17 டிசம்பர் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த துருஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (39). வெல்டிங் தொழில் செய்து வரும் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அவ்வப்போது மது அருந்திவிட்டு சூதாட்டம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் சூதாட்டம் ஆடும் போதெல்லாம் சுரேஷ் ஜெயிப்பது தான் வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சூதாட்டம் ஆடும் போது, சுரேஷிடம் சிலர் வாக்குவாதத்தில், ஈடுபடுவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இரவு முழுவதும் சுரேஷ் சூதாட்டம் ஆடியதாக தெரிகிறது. இதில் அவரே வெற்றி பெற்ற நிலையில், அடுத்த நாள் 15ஆம் தேதி மாலை சுரேஷை அவருடன் சூதாட்டத்தில் ஈடுபடும் நண்பர்கள் துருஞ்சிகுப்பம் சுடுகாட்டின் அருகே மது அருந்த வருமாறு, தொலைபேசி மூலம் அழைத்ததாக தெரிகிறது.
இதனையடுத்து சுரேஷ் துருஞ்சிகுப்பம் சுடுகாடு அருகில் சென்றுள்ளார். அப்போது அங்கு மது போதையில் இருந்த சிலர், சுரேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர். இதனால், சுரேஷ் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், பின்தொடர்ந்து வந்த நபர்கள் அவரை வழிமறித்து, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சுரேஷை கண்டு அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சடலமாக கிடந்த சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு சுரேஷின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் காவல்துறையினர் சுரேஷின் தொலைபேசியை கைப்பற்றி ஆய்வு செய்த போது, அவர் அதே பகுதியை சேர்ந்த சரத் என்பவருடன் பேசியது தெரியவந்துள்ளது.
உடனடியாக சரத்தை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது சூதாட்டத்தின் போது அதிகளவில் பணத்தை இழந்த நண்பர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கைகலப்பாக மாறியதாகவும், அதனைத் தொடர்ந்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி, சுடுகாட்டிற்கு வரவழைத்து கொலை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து இந்த கொலை வழக்கில் போலீசார் அதே பகுதியை சேர்ந்த சரத் (24), தர்மதுரை (32), தென்பாண்டியன் (35), சுரேஷ் (39) ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN