Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 டிசம்பர் (H.S.)
தமிழ்நாட்டில் காவல் உயரதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லிகளாக ஒருவர் கூட பணியில் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென கடந்த 2022ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட்டதா? என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வு கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில், நீதிபதிகள் முன்பு ஆஜரான தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, டிஜிபியின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில், தங்களது இல்லங்களில் ஆர்டர்லிகளாக யாரும் பணியாற்றவில்லை என தற்போது பதவியில் இருக்கும் உயரதிகாரிகளும், ஓய்வு பெற்ற உயரதிகாரிகளும் தெரிவித்துள்ளதாக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கூறினார்.
அப்போது, நீதிபதிகள் ஒரு ஆர்டர்லி கூட பணியில் இல்லையா? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், தற்போது ஒருவர் கூட இல்லை என்றும் அவ்வாறு இருப்பதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து, சிறைத்துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டதை போல சட்டம் ஒழுங்கு காவல் பிரிவிலும் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட வேண்டுமென கூறிய நீதிபதிகள் ஆர்டர்லி முறையை பின்பற்றுவது குற்றம் என்றும் தெரிவித்தனர்.
மேலும், பணியில் இருப்பதாக (( ON DUTY )) கூறிவிட்டு தனிப்பட்ட வேலைகளில் ஈடுபடும் காவலர்களை கண்காணிக்க பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து நாளை தகவல் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam