Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 18 டிசம்பர் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு இன்று (டிசம்பர் 18) சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது,
மஞ்சள், மஞ்சள் பொதுவாக நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் எடுத்து வைத்து தான் ஆரம்பிப்பார்கள். நம்ம வீட்டில் கூட அம்மா, அக்கா, தங்கைகள் நமக்காக, நாம் நல்ல இருக்க வேண்டும் என்பதற்காக, மஞ்சள் புடவை கட்டி கொண்டு தான் வேண்டி கொள்வார்கள். மஞ்சள் என்றாலே தனி 'வைப்' தான்.
நம்ம தவெக கொடியில் கூட அந்த எனர்ஜிட்டிக்கான மஞ்சள் இருக்கிறது. அந்த மாதிரி மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி இந்த ஈரோடு பூமி. இங்க வந்து மஞ்சள் பற்றி பேசாமல் வேற எங்க போய் பேசுவது? இங்க ஒரு மகத்தான மனிதர் பற்றி நாம் பேசி ஆக வேண்டும்.
இந்த ஈரோடு மண் விவசாயத்திற்கு பெயர் போன மண், இங்க நடக்கிற விவசாயத்திற்கு மிக முக்கியமான கவசமாக இருப்பது காலிங்கராயன் அணை, கால்வாய். அணை கட்டியதிலும், கால்வாய் வெட்டியதிலும் உணர்வு பூர்வமான நிறைய விஷயங்கள் இருக்கிறது.
இந்த அணை கட்டும் போது அவர் சோர்வு அடைந்துவிட்டார், அப்போது அவங்க அம்மா சொன்னாங்களாம், மகனே காலிங்கா, தயிர் விற்ற காசு தாழ்வாரம் வரைக்கும் இருக்கிறது, மோர் விற்ற காசு, முகடு வரைக்கும் இருக்கிறது. அதை எடுத்து கொண்டு அணையை கட்ட தைரியம் கொடுத்தார்களாம். பெத்த அம்மா கொடுக்கும் தைரியம் இருக்கு பாருங்கள், அதை தாண்டி வேற ஏதுமே கிடையாது. ஒரு மனிதனால் எதையும் சாதித்து காட்ட முடியும்.
அப்படி ஒரு தைரியத்தை தான், இப்பொழுது நீங்கள், என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள், நண்பா, நம்பிகள், நண்பர்கள் எல்லோரும் எனக்கு அந்த தைரியத்தை கொடுத்து இருக்கிறீர்கள், துணையாக இருக்கிறீர்கள்.
இதை பிரிப்பதற்காக என்ன அவதூறுகளை எல்லாம் விஜய் மீது சொல்லி மக்களை நம்ப வைக்கலாம், என்ன எல்லாம் சூழ்ச்சிகளை செய்து மக்களை நம்ப வைக்கலாம் என்று, இப்படி சூழ்ச்சிகளை மட்டும் நம்புகிற சூழ்ச்சிக்கார கூட்டங்கள் தொடர்ந்து இதை செய்து கொண்டு தான் இருக்கிறது. அவங்களுக்கு தெரியாது, இது, இன்னைக்கு வந்த உறவு அல்ல.
33 ஆண்டுகளுக்கு மேல இருக்கிற உறவு. சினிமாவுக்கு நான் வந்த போது வயது 10, அப்போது இருந்தே இந்த உறவு ஸ்டார்ட் ஆகி இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. நீங்க என்ன செஞ்சாலும் இந்த விஜய்யை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். மக்கள் கூடவே இருப்பார்கள் என்று அவர்களுக்கு தெரியாமல் போச்சு.
உங்களை நம்பி தான் வந்து இருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். அண்ணாதுரை, எம்ஜிஆர் தமிழகத்தின் சொத்து. அவர்களை பயன்படுத்துவது குறித்து யாரும் கம்ப்ளைன்ட் செய்ய முடியாது. தனியாக சொந்தம் கொண்டாடி யாரும் அழுதுகொண்டு இருக்கக் கூடாது.
நாங்கள் ஒரு வழியில் அரசியல் செய்து கொண்டு போயிட்டு இருக்கிறோம். உங்களுக்கு தவெக ஒரு பொருட்டு இல்லை என்றால் ஏன் கதறுகிறீங்க?
மக்கள் எல்லாத்தையும் உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் காசு தான் துணை; எனக்கு என் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் 'மாஸ்' (மக்கள்) தான் துணை.
பெரியார் பெயரை சொல்லி கொள்ளை அடிக்காதீர்கள். நமது அரசியல் எதிரி திமுக; கொள்கை எதிரி பாஜக. தவெக ஒரு பொருட்டில்லை என்றால் ஏன் கதறுகிறீர்கள்?. கொள்ளையடித்து வைத்துள்ள பணம்தான் உங்களுக்குத் துணை; ஆனால் எனக்கு இந்த மாஸ் தான் துணை. களத்தில் உள்ள எதிரிகளை மட்டும் தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க நேரமில்லை.
எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள். நீட் ரத்து, கல்வி கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியமாக 100 ரூபாய் கொடுப்போம் என்று அடித்து விட்டார்கள். இன்றுவரை ஏதாவது செய்தார்களா? இவர்கள் எப்போதுமே சொல்வது ஒன்று, செய்வது ஒன்றுதான்
24 மணி நேரமும் விஜயை எப்படி மடக்கலாம்; தவெகவை எப்படி முடக்கலாம் என்றுதான் நினைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அசிங்கமாக பேசுவது தான் அரசியல் என்றால் அது எனக்கு வராது. நான் எத்தனை நிமிஷம் பேசினால் என்ன? எப்படி பேசினால் என்ன? விஷயம் என்ன என்று பாருங்கள். நாங்கள் வாயிலேயே வடை சுட திமுகவா... தவெக. திமுக ஒரு தீயசக்தி. தவெக ஒரு தூயசக்தி
நமக்கு துணையாக இருக்கும் ஈரோடு மக்களுக்காக குரல் கொடுக்க வந்து இருக்கிறேன். களத்தில் இருப்பவர்களையே எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்க்கும் ஐடியா இல்லை.
இவ்வாறு விஜய் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b