Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மண்டலத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் மொத்தம் 15 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, இதுவரை 10 கட்டங்களாக நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்களில் இதுவரை 24,587 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சென்னை மாவட்டம் பெருங்குடி மண்டலம், பள்ளிக்கரணையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று
(டிசம்பர் 19ம்தேதி) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் 11வது கட்டமாக நடைபெற்று வருகின்றது.
இன்று காலை 9 மணி அளவில் தொடங்கிய இந்த மருத்துவ முகாம் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில், பொது மருத்துவம், 17 துறை சார் நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகள், அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனை, முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனை, காசநோய், தொழுநோய் பரிசோதனை, ஆரம்ப புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கி வருகின்றனர்.
மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற இணைச் சேவைகளும் வழங்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b