Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 19 டிசம்பர் (ஹி.ச.)
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும், தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் பொருட்டு திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை (டிச.20) சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் திருத்தங்கள் அல்லது இடமாற்றம் செய்யவோ விரும்பும் வாக்காளர் பங்கேற்று பயனடையலாம்.
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முகவரி சான்றாக கீழ்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம். ஆதார்கார்டு, முகவரிக்கான குடிநீர், மின்சாரம், கியாஸ் இணைப்பு ரசீது (குறைந்தது 1 வருடத்துக்காவது), தேசிய மயமாக்கப்பட்ட அல்லது அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி, அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம், கடவுச்சீட்டு, விவசாயி புத்தகம் உள்பட வருவாய்த்துறைகளின் நிலஉரிமைப் பதிவுகள், பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம் (குத்தகைதாரராக இருந்தால்), பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம் (சொந்த வீடு எனில்) ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்.
வயது சான்றாக தகுதிவாய்ந்த உள்ளாட்சி அமைப்பு அல்லது நகராட்சி அதிகாரி அல்லது பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் வழங்கிய பிறப்பு சான்றிதழ், ஆதார்கார்டு, பான்கார்டு, ஓட்டுனர் உரிமம், சி.பி.எஸ்.சி. அல்லது ஐ.சி.எஸ்.சி. அல்லது மாநில கல்வி வாரியங்களால் வழங்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. அல்லது பிளஸ்-2 வகுப்பு சான்றிதழ்கள் (அதில் பிறந்த தேதி இருந்தால்), இந்திய கடவுச்சீட்டு, https://voters.eci.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தான் வசிக்கும் இருப்பிடத்தை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது தற்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே இடம் பெயர்ந்தாலோ அல்லது வாக்காளர்களின் விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலோ, இடம் பெயர்தல், திருத்தம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்து போதல் ஆகிய காரணங்களுக்காக மாற்று புகைப்பட அடையாள அட்டை பெற வேண்டி இருந்தாலோ படிவம் 8-ல் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட படிவங்களுடன் கண்டிப்பாக உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். வருவது தேர்தல் ஆண்டு என்பதால் பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b