Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அமைத்தது.
இந்த குழுவில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஐவர் குழுவினர் நாளை (டிச 03) அண்ணா அறிவாலயம் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச இருக்கிறார்கள்.
குழு அமைக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக நிகழ்வுள்ள இந்த சந்திப்பில் சட்டசபை தேர்தல், பிரசார வியூகம், கூட்டணி கட்சிகள் ஒருமித்தமாக செயல்படுவது குறித்து பேசப்பட உள்ளது.
தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தையும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து, கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரிடம் தி.மு.க. பேச இருக்கிறது.
பா.ம.க. (டாக்டர் ராமதாஸ்), தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தி.மு.க. அணியில் இணையலாம் என்ற கருத்தும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / vidya.b