Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)
'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் நகர் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தொடர் மழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நகர்ந்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னைக்கு கிழக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, சென்னையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் இருக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை (புதன்கிழமை) முதல் 5-ந்தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்துள்ளனர்.
மேலும் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM