Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)
ஜி.எஸ்.டி பலனை மக்களுக்கு வழங்காமல் ஊட்டச்சத்தைப் பறிக்கும் ஆவின் என விமர்சித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, நமது பிரதமர் நரேந்திர மோடியின் அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தத்திற்கு இணங்க ஆவின் பொருட்களின் விலையைக் குறைக்காமல் இழுத்தடித்த திமுக அரசு, மக்களின் கண்டனக் குரல் எழும்பியதும் பண்டிகைக் கால போர்வையில் விலையைக் குறைப்பது போல நாடகமாடியது ஊரறிந்த விஷயம்.
இந்நிலையில், தற்போது கமுக்கமாக ஆவின் நெய் விலையை உயர்த்தி, மக்களின் நலனை உறிஞ்சும் தனது கோர முகத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது திமுக அரசு.
உதாரணமாக ஜி.எஸ்.டி 12% ஆக இருந்த போது ஒரு லிட்டர் நெய் ரூ.700-ற்கு விற்கப்பட்டது. தற்போது ஜி.எஸ்.டி 5% குறைக்கப்பட்ட பின் ஒரு லிட்டர் நெய் ரூ.656-ற்கு விற்கப்பட வேண்டிய நிலையில், அதே ரூ.700-ற்கு விற்று மக்களின் மீது நிதிச் சுமையை ஏற்றும் திமுக அரசின் அகங்காரம் கண்டனத்திற்குரியது.
நந்தினி, அமுல் போன்ற பிற மாநிலப் பால் கூட்டுறவு நிறுவனங்கள் புதிய ஜி.எஸ்.டி வரிகளுக்கு ஏற்றவாறு மூன்று மாதங்களுக்கு முன்பே பால் பொருட்களின் விலையைக் குறைத்த நிலையில் தற்போது வரை விலையைக் குறைக்காமல் மக்களுக்கு திமுக அரசு துரோகமிழைத்து வருவது ஏற்புடையதல்ல.
எனவே, புதிய ஜி.எஸ்.டி சீர்திருத்தத்திற்கு இணங்க ஆவின் பொருட்களின் விலையை உடனடியாகக் குறைக்காவிடில், மக்கள் நலனுக்காகத் தமிழக பாஜக பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ